கருப்பு நிலா
நீள்கோட்டுப் பயணத்தின்
நிறுத்தங்கள் ஏதுமற்ற பாதையில்
யாருக்கும் வாய்த்ததில்லை,
இப்படியொரு சந்திப்பு.
ஊமை பாஷை,
ஊடாடும் அழுகை,
முகம் திருப்பல்,
பதற்றம்,
பரிதவிப்பு,
யாருக்கும் தெரியாமல்...
கண்ணீர்த் துளி என்று,
எதுவுமே நடக்கவில்லை.
'எப்டிப் போகுது?' என்றான்.
'ம். பரவாயில்லை!' என்றாள்.
பேச்சுகள் நீடித்து
நேரம் முடிவுற்றபோது,
'பார்ப்போமா?' என்றான்.
புன்னகைத்து அனுப்பினாள்.
அவன் போனபின்பு,
தனக்குத் தானே
பேசிக்கொண்டாள்.
'ஏன்டா கேட்கலை,
நல்லா இருக்கியா?' என்று.
அதை நீ கேட்டிருந்தால்,
சொல்லியிருப்பேனே...
'நேற்றே நான் செத்துவிட்டதை!'
karuppunilaa@gmail.com
நன்றி : திண்ணை
No comments:
Post a Comment